இரவு முழுவதும் உடலும் மூளையும் ஓய்வு எடுத்து கொண்ட மறுநாள் காலை அவற்றுக்கு சக்தியை அளிக்கும் சர்க்கரை தேவைப்படுகிறது. இந்த சர்க்கரையை நமது காலை உணவு மட்டுமே நமக்கு அளிக்க முடியும். மாறாக நீங்கள் ஒரு கப் பால், அல்லது ஒரு பழம் என்று சுருக்கிக் கொண்டால் அது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு காலை உணவில் கார்போவைதரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயற்பட தேவையான சக்தியை அளிக்கிறது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே பள்ளி செல்லும் குழந்தைகளை காலை 6 மணிக்கு எழுப்பி, அவர்கள் காலைக் கடன்களை முடித்து குளித்து 7 மணிக்கு அவர்களுக்கு காலை உணவைக் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. தாமதமாக எழுந்தால் அவர்கள் காலை உணவை உண்ணாமல் பள்ளிக்குச் செல்ல வேண்டியிருக்கும். இதனால் பாடங்களை அவர்கள் சரிவர கவனிக்க முடியாது. நேரமின்மை என்று சொல்லாதீர்கள்


காலில் சக்கரங்களை கட்டிக்கொண்டு ஓடும் அவசர உலகத்தில் பெரும்பாலானவர்களுக்கு, காலை உணவை சாப்பிடக்கூட நேரமின்மையால் அதனை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் உண்மை என்ன என்பதை உணருங்கள். இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரங்கள் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு விடப்படுகிறது. எனவே உடலுக்கு தேவையான சக்திக்கு காலையில் உணவு சாப்பிடுவது அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சர்க்கரைச் சக்தியை அளிக்கிறது. காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருள்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது, அது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது. காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம்.

அதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும். எனவே ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயற்பாடு, உடல் நலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாகத் திட்டமிட்டு குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்...!!